என்சொந்தங்கள் சிந்திய செந்நீரின் விதையில்,
அவர்களது கண்ணீரின் உரம்சேர்த்து!
முளைக்கும் புது புரட்சிவிருட்சம்!
இனவெறியனே!
உன் இறுமாப்பை இடித்துரைக்க!
நீ மறுதலித்த மனசாட்சியை
உனக்கு நினைவூட்ட!
மணற்பொம்மையாய் மரத்தமிழரை நினைத்த
உன்மமதையை அடக்க!
குள்ளநரி சூழ்ச்சிசெய்யும்
உன்கயமையை களையெடுத்து!
உன்கனவுகளுக்கு கல்லறை கட்ட!
வெட்டவெட்ட வளருவதால் மரமென்று
நினைத்தாயோ - ஆம்! மரம்தான்!
ஆலமரம்!!!
கிளையொன்றை வெட்டிவிட்டு வெற்றியென்று
மார்தட்டும் மடையனே!
அதன்ஆணிவேர் பாய்ச்சிய புரட்சிரத்தம்
படர்ந்த இடமெல்லாம் புதுவிருட்சம் முளைக்கும்!
அதன்உறுதிகண்டு உன்னையே பதம்பார்க்கும்!
நீ அனுப்பும் கோடாரி!
நீகருவறுக்க துடித்த தமிழ்சிசுக்களின்
அக்னிப்பார்வையில்!
உன்தேகம் மட்டுமல்ல - உன்தேசமே
எரிந்து சாம்பலாகும்!
அந்தசாம்பல் கூடஎம் மண்ணில்படாமல்
தூக்கி வீசப்படும்!
எங்கள் புரட்சிப்புயலின் வேகத்தால்!
- தல்லிதாசன்