புதன், 31 டிசம்பர், 2014

நான் நாத்திகன் அல்ல




கல்லைக் காட்டி கடவுள் என்றனர்
காரணம் கேட்டேன்!  கதை சொன்னார்கள்!

ஆதியந்தம் அற்றவன் என்றார்கள்!  ஆண்டவனை!
அறைக்குள் அவனை பூட்டிய அதிமேதாவிகள்!

பிறன்மனை நோக்காதே என்றான் வள்ளுவன்!
அதை மறந்தவனை ஆண்டவன் என்கின்றனர்!

கதிரியக்கத்தை கணக்கிட்டு கட்டிய கலைக்கூடத்தை
கோயில் என்றனர் உடலுழைப்பை மறுத்தவர்கள்!

சந்திரன் சூரியனனெ இறைவன் படைத்த
பொருளை வணங்கும் பொல்லாத மனிதர்களே!

அனைத்து மனிதர்களும் இறைவனின் படைப்புதான்!
ஏற்றத் தாழ்வுகள் ஏதுமின்றி ஏற்றிடுங்கள்!
கடவுளாகக்கூட அல்ல மனிதனை மனிதனாக!

                      - தல்லிதாசன்

புதன், 10 டிசம்பர், 2014

என்னவளின் நிழலோவியம்



கண்ணிமையில் உனைவைத்து கைவிரலில் நான்தீட்டிய உயிரோவியம்!

அதைக்காண வந்த வெண்ணிலவை அந்தரத்தில் நிறுத்தியது!
கருமையால் தீட்டப்பட்ட உன்கார்கூந்தலை தழுவநினைத்த தென்றலின் வேகம்!

ஆயிரம் விண்மீன்களின் பொலிவு கொண்ட உன்நிழல்முகம் கண்டு!
வெட்கத்தால், முகம்மூட முகிலின்றி மேற்கில் மறைந்தான் ஆதவன்!!!

இவையேதும் அறியாமல்! ஆகாயத்தை கடந்து போனேன்! இமையோடு உனைவைத்த இன்பத்தால்!!!

ஏன் வநதாய்?


"தன்காதலைச் சொல்ல சென்ற காதலியிடம் இருந்து, "ஏன் வநதாய்?" என்ற கேள்வியை எதிர்பாராத ஆண்மகன், விடையாய் வெளிப்படுத்திய காதல் மொழிகள் இவை."


விழியென்னும் வீணையில்
இமையென்னும் விரல்கள்
கானம் இசைக்கும்
அழகை ரசிக்க வந்தேன்!

உன்காது மடலோரம்
கதைபேசும் தென்றலினால்
நாட்டியமாடும் வளையங்களின்
நடனத்தை ரசிக்க வந்தேன்!

உன்அல்லி இதழ்களில்
தேனருந்தத் துடிக்கும்
வண்ணத்துப் பூச்சிகளின்
அதிஷ்டத்தை ரசிக்க வந்தேன்!

வெள்ளிப் புன்னகைநீ
சிந்தஉன் கன்னத்தில்
தோன்றும் குழியின்
ஆழத்தை ரசிக்க வந்தேன்!

காற்றில் கோலமிடும்
உன்கைகளில் விரலெனும்
வெள்ளைத் தூரிகைகளின்
மென்மையை ரசிக்க வந்தேன்!

உனைத்தொட ஏங்கும்
மணற்துகளை அலட்சியப்படுத்திய
பாதக் கமலங்களின்
கர்வத்தை ரசிக்க வந்தேன்!

கனவில் காதலைச்
சொன்னபோது நாணம்கொண்ட
நின்முக பாவனைகளை
நேரில் ரசிக்க வந்தேன்!!!

உன்நினைவில் துடிக்கும் இதயத்தின்
மௌனராகத்தை பாட வந்தேன்!!!  - ஆம்!
என்காதலைச் சொல்ல வந்தேன்!

                    - தல்லிதாசன்