வியாழன், 27 டிசம்பர், 2012

உயிரோவியம்

வண்ணமயிலின் தோகை எடுத்து!
புள்ளிமானின் வேகத்தோடு!
கற்பனைக் காகிதத்தில் நான்தீட்டிய
                            அழகோவியம்!
இதோ!
இன்று என்கண் முன்னே!
                          என்னவளாய்!!!

                        - தல்லிதாசன்

சனி, 15 டிசம்பர், 2012

கவிவடித்தேன்

கவி வடித்தேன் நான்! - ஆம்!
விழிசெவி இரண்டின் வேதனையை
         கவிதையாய் வடித்தேன்!

முறத்தால் புலிவிரட்டிய தமிழச்சியின்
            மறத்தை வடித்தேன்!
தன்னலம் மட்டுமே பேணும்பேடியின்
            கயமை விடுத்து!

ஏர்பிடிக்கும் ஏழை   உழவனின்
           கண்ணீரை  வடித்தேன்!
பதுக்கல் பேர்வழிகளின் இரக்கமற்ற
           மனதை விடுத்து!

சுதந்திரக் காற்றை சுவாசிக்க!
            செந்நீர் சிந்திய செம்மல்களின்
                          தியாகம் வடித்தேன்!
இன்றைய ஊழல்ஊதாரிகளின் வாரிச்சுருட்டும்
              வல்லமை விடுத்து!

நம்மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின்
               தேசத்துரோகம் வடித்தேன்!
அகண்டபாரதம் எனும்அவனது  அளப்பறியா
               ஆவல் விடுத்து!

சொந்தமண்ணுக்கு போராடிய என்சொந்தங்களின்
                துயரம் வடித்தேன்!
அந்தத் துயர்துடைக்கத் துப்பில்லாத - என்
                 வெட்டிப்பேச்சின் வீரம் விடுத்து!

இனிவடிக்கத் துடிப்பதெல்லாம்! ஓர்
                   இனிய கவிதை! - அது!
ஏழைகள் இல்லாத நம்பாரதத்தில்!
எங்கும் பொங்கும் ஆனந்தக்கண்ணீரின்
                  இன்பக் கவிதை!!!

                                               - தல்லிதாசன்







புதன், 12 டிசம்பர், 2012

கண்ணீர்த்துளிகள்

கண்மூடி  வாழ்கிறேன்!
கனவில் மிதப்பதற்கு 
                                  அல்ல!
என் கண்ணீரை 
                       மறைப்பதற்கு!




காணாத முத்தொன்றை 
                                 நான்கண்டேன்!
என்றெண்ணி கையில்கொண்டேன்!
                           கண்ணாடிக்கல்லை!!!
அதுதந்த காயம் ஆறியது உடலில்!
                             மறுக்கிறது மனதில்!


              

மானொன்று மன்றாட! வேடனவன் 
          அறம்மறந்து அதைத் துண்டாட!
ஆண்டுகள் பலஆனாலும் 
            ஆறாத அந்தக் காயத்தால்!
கண்ணீராய் செந்நீர் வடிக்கிறது 
              புறம் புரியாத புள்ளிமான்!





கவிவரியில் கண்ணீர் வடித்தேன்
               என் சோகம் சொல்லி!
அதன்கருத்தைக் கண்டார் இல்லை!
               சொன்னாலும் ஏற்பார் இல்லை!
அதனால் தேடுகிறேன் ஒருஇதயம்!!!
என்தோள் சாய்த்து கதைசொல்ல!
என்கரம் கோர்த்துக் கடக்க 
                இந்த வாழ்க்கைக் கரையை!!!

                                                          - தல்லிதாசன்

திங்கள், 10 டிசம்பர், 2012

என்னை ஏன் மறந்தாய்?

ஆழ்கடலில் தோன்றும் ஆதவனைக்
                கண்டு அதிசயித்தோம்!
நாம் அறிமுகமான போது!

காற்றோடு கதைபேசும் இலைகளின் 
                 அழகை ரசித்தோம்!
நாம் பழகிய போது!

சிப்பியின்சிறப்பால் முத்தாய் மாறிய 
                 பனித்துளியை ரசித்தோம்!
நம்காதலை உணர்ந்தபோது!

கரையோடு பேசத்துடிக்கும் அலைகள்
          தயக்கத்துடன் திரும்பிய 
                       அழகை ரசித்தோம்!
நாம் காதலைச்சொல்ல தயங்கியபோது!

தவழும் தென்றலின் தாலாட்டுகேட்டு 
          தலையாட்டிய ரோஜாவை ரசித்தோம்!
நம் காதலை பரிமாறியபோது!

இப்படி நாம்பழகிய இனியநினைவுகளை 
          நீக்கமற நெஞ்சில் நிறுத்தவா! 
                         என்னை மறந்தாய்!????  - பெண்ணே!
உன் பரந்தமனதில் இடமில்லாமல்!

                                        - தல்லிதாசன்.


ஞாயிறு, 25 நவம்பர், 2012

வெற்றியின் ரகசியம்

அறிவியலின் ஆழம்பார்க்க - மனிதன்
          பிளந்தது அணுவைத்தான்!
                              ஆகாயத்தையல்ல!
உலகை வெல்லத்துடிக்கும் இளைஞனே!
நீ! உன்னை வென்றால்போதும்!
          உலகமே உன் காலடியில்!

                             - தல்லிதாசன்.

மழை

பூமித்தாயின் மடியில் தவழ்ந்து!
        காலத்தின் கோலத்தால் காற்றாகி!
அன்னையின் தாகமொழி கேட்டு
         அரவணைக்க ஓடிவரும்
                                  அன்புக்குழந்தை!

                                  - தல்லிதாசன்.

                                      

சனி, 24 நவம்பர், 2012

ஆசைத்துளிகள்

காதல் மலரின் வாசமறியா
                  வண்டு நான்!
கனவுச் சோலையின் பாதையறியா
                  பறவை நான்!
கவியமுதின் சுவை அறியா
                  குழந்தை நான்!
கொடியிடை கோமகளே! - உன்
        பொன்னிற பிம்பம் என்கண்ணில்
                       தோன்றும் வரை!


கண்முன்னே காட்சிகளாய் நீநிற்க!
        காண்பதெல்லாம் கருவிழியைக்
                                     கொள்ளைகொள்ள!
காண்பது கனவா?! நனவா?!- என்றறிய
என்னை நானே கிள்ளும்போது பிறந்த
         நாதத்தில் அறிந்தேன் என்காதலை! - ஆம்!
நினைவெல்லாம் நித்யமாக!
எண்ணமெல்லாம் ஏஞ்சலாக!
செயலில்கூட என்செல்லம்! நீஇருக்க!
என் வாய்வடிக்கும் வார்த்தைமட்டும்
          எப்படி வேறொன்று! - உன் பெயரைத்தவிர!


வென்பனி மோதி வெந்தது
             என்இதயம்!  - பெண்ணே!
உன் மைவிழிப் பார்வை
             என்னை மையங்கொண்டதால்!


உன்செவ்விதழின் அழகொத்த மலரொன்றை
              காதல் கொண்டு வருடியதால்!
தென்றலாய் முக்திபெற்ற காற்றது!
             என்னைத் தீண்டும்போது - என்
நெஞ்சில் மோதியஉன் நினைவலைகளின்
             மிச்சம் என்கண்களில் கண்ணீராய்!


முகிலின்றி மழை பெற்றேன்
        உன் ஓரவிழிப் பார்வையால்!
செவ்வாயில் கால் பதித்தேன்
         உன் செவ்விதழின் மொழிகேட்டு!
கண்இமைக்கும் நேரத்தில் கடல்கடந்தேன்
          உன் கரம்பிடிக்கும் கற்பனையில்!
இவையெல்லாம் அன்பே!
என் வாழ்க்கைச் சோலை பூத்துகுலுங்கிய!
நம்நினைவில் நாம் மட்டும் நின்ற
         அந்த வசந்த காலத்தில்!
ஆனால் இன்றோ கண்ணீர்கூட எனக்கு
                                             கனவாகிப்போனது!
கல்லாய் மாறிய உன் இதயம் அறிந்து!




                                                - தல்லிதாசன்.

கடவுள்

நாத்திகனின் புத்தியில் புதைந்தவன்
               ஆத்திகனின் வாய்மொழியில் வசிப்பவன்!
நல்லமனிதர்களின் நெஞ்சில் நிறைந்தவன்!
இதோ காண்கின்றேன்!
அக்கடவுள் வாழும் நல்லுள்ளம் கொண்ட 
                என் தெய்வங்களை!
அன்பு பொழியும் அன்னையாக!
          அறிவூட்டும் கல்விதந்த ஆசானாக!
என்கல்விக்கு கரம்கொடுத்த கருணையாளனாக!
          அகம்புறம் அறியவைத்த 
                                       அன்புச்சகோதரர்களாக!

                                          - தல்லிதாசன்.

செவ்வாய், 6 நவம்பர், 2012

வா தோழா வா


வெள்ளநீரைத் தடுக்கும் அணையாய் 
        அங்கே எல்லையில் நம்வீரர்கள்
கண்ணுறங்காமல் நம்தேசம் காக்க!
நாட்டில் பெருக்கெடுத்த சாக்கடைகளின் 
         வாடையறியாமல் உறங்கிக் கிடக்கும் 
                        இளைஞனே!   -  விழித்திடு!

நம்பாரத மண்ணின் பெருமையறி!
அதன்வளங்கள் சுரண்டப்பட்ட 
                 வரலாற்றைப் படி!
வீணர்களின் கையில்சிக்கிய  அதன் 
                   பரிதாபநிலையைப் பார்!
இன்னும் ஏன் தாமதம்?????

உன்னைச் சுத்தமாக்கி  இந்த 
                        நாட்டைச் சுத்தமாக்க
வீறுகொண்டு எழுந்து வா!
ஊழல் ஊதாரிகளை விரட்டியடிக்க!
இலஞ்சப்பேய்களை வஞ்சம் தீர்க்க!
 வீரநடை போட்டு வா!

உலகஅரங்கில் நம் பாரதத்தாயின்
                        பெருமை காக்க!
புறப்பட்டு வா தோழனே!
                        புதுப் புரட்சிப் புனைய!

                                           --  தல்லிதாசன்

 

திங்கள், 5 நவம்பர், 2012

அற்புத மந்திரம்


கனவுகள் பலகண்டு 
                   அதையடையும் வழி கண்டு
உல்லாச உலகில் உரிமம் 
                    பெற்றவன் நீ!

அன்பெனும் அறமறிந்து
        அற்புதங்கள் பலநிகழ்த்த 
ஆனந்த உலகில் அனுமதி 
                 பெற்றவன் நீ!

மெய்ஞானத்தின் மேன்மைபற்றி 
          வாழ்வின் நெறியுரைக்க 
தங்கத் தரணியில் தாள் 
         பதித்தவன் நீ!

இருலொழிக்கும் தீபமாய்!
                எங்கும்  அறிவுச்சுடரேற்ற
இன்ப உலகில் இசைபாடி 
                வந்தவன் நீ!

உற்சாக உளியெடுத்து 
            வெற்றிச் சிலைசெதுக்க
பரந்த பூமியில் பண்பாடு 
            புனைந்தவன் நீ!

நீ இரசித்து மகிழ 
          இதுவெறும் கவியல்ல!
உன் முன்னோரின் 
          பெருமைசொல்லும் துதியல்ல!


உன்மனக் கோவில் தெய்வமாம்!
              ஆனந்தத்தை தரிசிக்க!
அனுதினமும் உனக்குநீயே சொல்லவேண்டிய 
                  அற்புத மந்திரம்!
                                                       -- தல்லிதாசன்










ஆசைத்துளிகள்


கார்மேகக் கூட்டமது 
                      காதலுடன் சேர்கையில் 
வண்ணச் சாமரம் வீசும் 
                        அழகு மயிலின் ஆட்டம் கண்டேன்!
பெண்ணே! 
வெள்ளிக் குடமதின் 
                   வெண்சங்குக் கழுத்தாம் 
                                   உன் இடையில்!


அல்லி மலரிரண்டு 
ஆசையுடன் கூடும்போது 
சிந்திய முத்தம்பட்டு 
நாணத்தால்  சிவந்த  செந்தாமரை 
              கண்டேன் உன் இதழில்!


அன்னநடை நடந்து பின்னழகில் நீ மீட்டும் 
                 வீணைகளின் இனிய கானத்தில்  
காமனவன் மெய் சிலிர்க்க 
கார்முகிலும்  நீர் சொரிய!
காற்றுகூட கீதம் பாட 
நான்மட்டும் நின்றேன் சிலையாய்!
முன்னமே உன்முன்னழகைக் 
                          கண்ட மயக்கத்தில்!


கண்டாங்கிப் புடவை கட்டி 
          கன்னி மணம் வீச 
கழனியில் நீ நடக்கையில்!
கட்டிக் கரும்பு தின்ற 
               குட்டிஎறும்பின் மயக்கம் 
                         இந்தக் காளை மனதில்!


விண்ணின்று வந்த மீனொன்றை
           பிறர்கண்  படாமல் இருக்க 
கரும்பொட்டு வைத்து வரவேற்றாள் 
                              பூமித்தாய்!  - உன் 
தங்கரத மேனியில் கண்களாய் பதிப்பதற்கு!


மொட்டவிழ்த்து பூத்துநின்ற புதுமுல்லையின்
வாசம்தொட்டு வந்த வெண்ணிலா!
மலைத்து நின்றது மண்ணிலிறங்காமல்!
                                         - பெண்ணே!
மன்மதபானமாய் ஒளிவீசும்
                                உன் ஓரவிழிப் பார்த்து !





                                                            -- தல்லிதாசன்















சனி, 3 நவம்பர், 2012

ஏக்கம்


வானத்து விண்மீனாய்  
                    நீ  விளங்க!
உனைக்கண்டு நீர்மீனாய் 
                    நான் ஏங்க !
தணிவதில்லை இந்த 
                   மோக தாகம்! - பெண்ணே!
என்காதல் மலரை 
                     நீ சூடும்வரை!
                                                        -- தல்லிதாசன் 

மழையின் காதல்


நீ மழையில் நனையும் அழகைக்கண்டு
               கண்ணடித்தது மின்னல்!
அதைப்பார்த்து எக்களித்தது இடி! 
                பாவம்! - அதற்கு தெரியாதே!
மழை மண்ணுக்கு வருவதே 
                உண்மேனியைத் தொடுவதற்கென்று!
  
                                           --    தல்லிதாசன்

வெற்றிப்பாதையின் வாசல்


எரிமலையின் சீற்றத்தை  எதிர்கொள்ளும்
                                    ஆற்றல் கொண்டவனே!
மலையை மடுவாக்கிய உனக்கு
                 மண்ணைப் பொன்னக்குவது எம்மாத்திரம்!

தோழா  நீ   துவண்டுவிடாதே
                  தோள்கொடுக்க ஆளில்லையென்று!
உன்தோளை எதிர்நோக்கும்
                  கூட்டமதை எறிந்துவிடாதே!

கண்கலங்கி நீநிற்பது  இதுவே
                                            கடைசியாகட்டும்!
உன்னால் பிறர்சொரியும் ஆனந்தக்கண்ணீர்
                       இனி ஆரம்பமாகட்டும்!

கருணையைக் கண்களில் வை!
                     பாசத்தை நெஞ்சில் வை!
கோபத்தை பிடரியில் வை!
                இதழ்களில் எப்போதும் புன்னகை வை!
ஒழுக்கத்தை மூச்சில் வை!
                 விடாமுயற்சியை விரல்களில் வை!
ஏக்கத்தை மனதில் வைத்து
                        அதன்தாக்கத்தை உலகுக்கு வை!

ஆதவனையண்டும் பீனிக்ஸ் பறவையிடம்
           இலட்சியவேட்கையின் இரகசியம் கேள்!
தன்வலையை தானேபின்னும் சிலந்தியிடம்
            விடாமுயற்சியின் விடையைக் கேள்!
மண்ணை முட்டும் விதையிடம்
             தன்னம்பிக்கையின் தாரகமந்திரம் கேள் !
கடலில்வீசும் அலையிடம் ஓய்வறியா
             உழைப்பின் உள்ளர்த்தம் கேள்!


கூரியவாளாய் நீபெற்ற அறிவோடு
             வாழ்க்கைதந்த அனுபவம் கொண்டு
                          படைத்திடு புது வரலாறு!

நீகாணும் இடமது மடுவாயினும்
            மலையாகமாற்றி அமைத்திடு
                     ஒரு சிம்மாசனம்!
உன்கரம் பிடித்து  நடந்தோரை
                         அமரவைக்க!!!

                                                   - தல்லிதாசன்
         
               

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

இனவெறியனுக்கு எச்சரிக்கை


என்சொந்தங்கள் சிந்திய செந்நீரின் விதையில்,
              அவர்களது கண்ணீரின் உரம்சேர்த்து!
முளைக்கும் புது  புரட்சிவிருட்சம்!

 இனவெறியனே!
              உன்  இறுமாப்பை இடித்துரைக்க!
நீ மறுதலித்த மனசாட்சியை
                              உனக்கு நினைவூட்ட!

மணற்பொம்மையாய் மரத்தமிழரை நினைத்த
            உன்மமதையை அடக்க!

குள்ளநரி சூழ்ச்சிசெய்யும்
           உன்கயமையை களையெடுத்து!
உன்கனவுகளுக்கு கல்லறை கட்ட!

வெட்டவெட்ட வளருவதால் மரமென்று
                           நினைத்தாயோ - ஆம்! மரம்தான்!
                                               ஆலமரம்!!!
கிளையொன்றை வெட்டிவிட்டு வெற்றியென்று
             மார்தட்டும் மடையனே!
அதன்ஆணிவேர் பாய்ச்சிய புரட்சிரத்தம்
            படர்ந்த இடமெல்லாம் புதுவிருட்சம் முளைக்கும்!
அதன்உறுதிகண்டு உன்னையே பதம்பார்க்கும்!
            நீ அனுப்பும் கோடாரி!

நீகருவறுக்க துடித்த தமிழ்சிசுக்களின்
                     அக்னிப்பார்வையில்!
உன்தேகம் மட்டுமல்ல - உன்தேசமே
                   எரிந்து சாம்பலாகும்!
அந்தசாம்பல் கூடஎம் மண்ணில்படாமல்
                  தூக்கி வீசப்படும்!
எங்கள் புரட்சிப்புயலின் வேகத்தால்!
                                 
                                            - தல்லிதாசன்

                         




          

முதல் கவிதை



காதல் வயப்பட்டேன் கவிதை வந்தது!
               ஆனால் எழுத மனமில்லை!   -   பெண்ணே!
காகிதத்தில் உன்முகம்!

                                              - தல்லிதாசன்



புதன், 10 அக்டோபர், 2012

தாய்க்கு சமர்ப்பணம்

தாய் 

பனித்துளியாய்  இருந்த நம்மை ,
                             முத்தாக மாற்றிவிட்டு!
கிளிஞ்சலாய் ஒதுங்கி நிற்கும் சிப்பி !!!
                 
தன்னிகரில்லா தியாகத்தால்
                              தரணியைத் தாங்கும் தங்கமகள்!!!


ஆம்!  அத்தகைய தங்கத் தாயின்
                              தன்னிகரில்லா தியாகத்துக்கு
இந்த அன்பு மகனின்
                               எளிய பரிசு!

                                                    - தல்லிதாசன்