ஆற்றல் கொண்டவனே!
மலையை மடுவாக்கிய உனக்கு
மண்ணைப் பொன்னக்குவது எம்மாத்திரம்!
தோழா நீ துவண்டுவிடாதே
தோள்கொடுக்க ஆளில்லையென்று!
உன்தோளை எதிர்நோக்கும்
கூட்டமதை எறிந்துவிடாதே!
கண்கலங்கி நீநிற்பது இதுவே
கடைசியாகட்டும்!
உன்னால் பிறர்சொரியும் ஆனந்தக்கண்ணீர்
இனி ஆரம்பமாகட்டும்!
கருணையைக் கண்களில் வை!
பாசத்தை நெஞ்சில் வை!
கோபத்தை பிடரியில் வை!
இதழ்களில் எப்போதும் புன்னகை வை!
ஒழுக்கத்தை மூச்சில் வை!
விடாமுயற்சியை விரல்களில் வை!
ஏக்கத்தை மனதில் வைத்து
அதன்தாக்கத்தை உலகுக்கு வை!
ஆதவனையண்டும் பீனிக்ஸ் பறவையிடம்
இலட்சியவேட்கையின் இரகசியம் கேள்!
தன்வலையை தானேபின்னும் சிலந்தியிடம்
விடாமுயற்சியின் விடையைக் கேள்!
மண்ணை முட்டும் விதையிடம்
தன்னம்பிக்கையின் தாரகமந்திரம் கேள் !
கடலில்வீசும் அலையிடம் ஓய்வறியா
உழைப்பின் உள்ளர்த்தம் கேள்!
கூரியவாளாய் நீபெற்ற அறிவோடு
வாழ்க்கைதந்த அனுபவம் கொண்டு
படைத்திடு புது வரலாறு!
நீகாணும் இடமது மடுவாயினும்
மலையாகமாற்றி அமைத்திடு
ஒரு சிம்மாசனம்!
உன்கரம் பிடித்து நடந்தோரை
அமரவைக்க!!!
- தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக