கண்ணீரால் மை நிரப்பி
வறண்ட மண்ணில் மனுஎழுதி!
வறட்சி நிவாரணம் கேட்டோம்!
ஆனால் நீயோ!
அம்பானியின் வர்த்தகத்திற்கு
விளம்பரத் தூதனானாய்!
அதனால் நாங்களும்
விளம்பரத் தூதரானோம்!
பூச்சிமருந்தின் வீரியத்திற்கு!
கல்விக்கு கடிவாளமிட்டு!
எங்கள் கனவுகளுக்கு
நீ!குழி பறிக்கையில்!
சட்டத்தின் ஒளியில்
குழிமூட முயற்சித்தோம்!
சட்டம் ஏழைகளுக்கு என்றுமே
விட்டில் பூச்சியென அறியாது!
அப்போதும் நீ!
வானூர்திக்கு முத்தமிட்டாய்!
அதனால் என்தங்கை
தூக்குக் கயிறுக்கு முத்தமிட்டாள்!
அயலவன் சுடுகையில்
பாதுகாப்பு கேட்டு!
கண்ணீர் மல்க நின்றோம்!
நீயோ!
எம்மைக் காக்க மறுத்து
அவன் துப்பாக்கிக்கு
தோட்டா வழங்கினாய்!
புயலோடு கடலோடிய
எம்மீனவ சகோதரன்
அபயக் குரல்எழுப்பி
ஆழியில் தவிக்கிறான்!
இப்போதும் நீ!
ஆட்சிப் பிடிக்க அலைகிறாய்!
என் சகோதரனோ!
மூச்சை இழந்து மிதக்கிறான்!
எங்கள் மீனவனின்
செந்நீர் குடிப்பது
மாற்றான் நாட்டு
செந்நாய்கள் என்றிருந்தோம்!
இப்போதுதான் புரிகிறது!அது!
எங்கள் கொல்லைப் புறத்தில்
குடியிருக்கும் உண்மை!
காவி வெறிபிடித்த
மனித மிருகங்களே!
எம்மீனவனின் செங்குருதி கலந்து!
காவியாய் மாறிநிற்கும் நீலக்கடலை!
நன்றாய்ப் பாருங்கள்!
அந்தக் குருதிகுடித்து
பறைசாற்றுங்கள் உங்களின்
தேசபக்தியை! ஆம்!
வீசிய புயலில்
கூசி நிற்கிறது
எங்களின் தேசபக்தி!
— தல்லிதாசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக