சனி, 5 செப்டம்பர், 2015

ஏன் இந்த மழைத்துளி?


தருவின் வேர்களில உற்சாகங்கண்ட பூமிப்பெண்
ஏறிட்டுப் பார்த்தாள் ஆவல் மேலிட!

அங்கே வர்ணமாலை சூடிநின்ற வானமகன்
கார்மேகங் கொண்டு மறைத்தான் ஆதவனை!

ஆகாயத்தின் ஆளுமை கண்டு
நாணம் கொண்டாள்  நிலமகள்!
அந்நாணத்தை கலவரமாக்கியது மண்ணை
நோக்கிய அந்த மழைத்துளி!

கார்மேகங் கொண்ட காதலில்
தன்னிலை மறந்து விழுகிறதா? அல்லது
அதனோடு கொண்ட ஊடலால்
கோபங் கொண்டு இறங்குகிறதா?

ஆழ்கடலின் அளவைக் கண்டு
அடைக்கலம் கொள்ள வருகிறதா? அல்லது
தவமிருக்கும் சிப்பியில் கருவுற்று
முத்தாய் பிறக்க வருகிறதா?

மொட்டவிழ்த்து பூத்துநின்ற ரோஜாவில்
தன்இதழ் பதிக்க வருகிறதா? அல்லது
அதற்கு காவல் நிற்கும்
முட்களிடம் காயம்பட வருகிறதா?

சாமரம் வீசும் மயிலின்
அழகைக் காண வருகிறதா? அல்லது
வண்ணத் தோகையில் படர்ந்து
தன்னைத் துறக்க வருகிறதா?

பட்டினத்தார் கொண்ட வாட்டத்தைப்
போக்க வாஞ்சையோடு வருகிறதா? அல்லது
கலங்கி நிற்கும் உழவனின்
கண்ணீரை மறைக்க வருகிறதா?

குழம்பிய காரிகையின் களையிழந்த
கன்னத்தில் முத்தமிட்டு சொன்னது மழைத்துளி!
உன்னில் வண்ணங்கூட்ட வானமகன்
அனுப்பிய மாலையில் ஓர்மலரென்று!!!

                         - தல்லிதாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக